எல்லோராலும் மதிக்கப்படவேண்டிய தேசிய தலைவர்கள் பலர் இன்று சில ஓட்டு பொறுக்கி அரசியல் வியாதிகளால் சிறு சாதி வட்டத்துக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். சாதி மத வேறுபாடின்றி மக்கள் பணி செயத பல தலைவர்களை (அவர் தங்கள் சாதியில் பிறந்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக) தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சில ஓட்டு பொறுக்கிகளால் அந்த தலைவர்கள் பிற சாதியினரால் வெறுக்கபடுகிறனர் என்பது நிதர்சனமான உண்மை.
தன் சொத்துபத்தை எல்லாம் விற்று ஏழைகளுக்கு குடுத்த முத்துராமலிங்க தேவர் இன்று தேவர் இனத்திற்க்கு மட்டுமே தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.சட்டமேதை அம்பேத்கார் தாழ்த்தபட்ட மக்களுக்கு மட்டுமே தலைவர் போல பிம்பங்களை உருவாக்கியுள்ளனர்.காமராசரை நாடார்களின் தலைவராக ஆக்கும் பணி செவ்வனே நடந்து வருகிறது. இதுபோன்று தலைவர்கள் பலரை சாதீய வட்டத்துக்குள் அடைப்பதால் தேவையற்ற காழ்ப்புணர்ச்சிகளே ஏற்படுகிறது. எல்லோராலும் ஏற்றுகொள்ளப்பட வேண்டிய தலைவர்கள் பிற சாதியினரால் வெறுக்கப்படகூடிய சூழல் நிலவுகிறது. தங்கள் சாதியை சார்ந்த தலைவர்களை கொண்டாடும் அரசியல்வாதிகளின் நோக்கம் அந்த தலைவர்களின் கொள்கைகளையோ, சிந்தனைகளையோ, சாதனைகளையோ மக்களிடம் சேர்ப்பது அல்ல. இவர்களின் நோக்கமெல்லாம் தலைவர்களின் பெயரைசொல்லி ஓட்டு பொறுக்குவது மட்டுமே.
இந்த லிஸ்டில் புதிதாக இணைக்கப்பட்டிருப்பவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள். வ.உ.சி யின் குருபூஜையை முன்னிட்டு தற்போது பல இடங்களில் கட்டவுட்,பேனர்,போஸ்டர்களில் அமர்ந்துகொண்டு சிரிக்கிறார் வ.உ.சி. கீழே சிரித்துக்கொண்டிருக்கும் வாழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கு வ.உ.சி யின் வாழ்க்கை பற்றி தெரியுமா?.வ.உ.சி எழுதிய நூல்களில் ஒன்றின் பெயராவது தெரியுமா?.இதுகாறும் வ.உ.சி மேல் வராத அக்கறை இவர்களுக்கு இப்போது வந்ததன் பிண்ணனி வரவிருக்கும் தேர்தலே.
வ.உ.சி யை வைத்து ஓட்டு பொறுக்க நினைக்கும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
தலைவர்களுக்கு சாதீய சாயம் பூசுவது. கடவுளுக்கு மதங்கள் பூசியுள்ள சாயம் போல் ஆகும்..ஒருவரின் கொள்கைகள் மற்றவருக்கு வெருப்பையே தரும்..
நாட்டிற்காக உழைத்த நல்லவர்களை, நல்லவர்களாக மட்டுமே பார்ப்போம்; சாதீய அடையாளங்களை மறுப்போம்.



