வீட்டைவிட்டு ஓடி வரும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆசிரியர் கண்டிப்பு,படிப்பில் வெறுப்பு,வீட்டில் கண்டிப்பு, வறுமை என ஓராயிரம் கதைகள் இருக்கும்.
பெருநகருக்கு ஓடிவரும் அவர்கள், கையிலிருக்கும் காசு கரையும் வரை இதுவல்லவோ வாழ்க்கை என்று சுற்றிதிரிகின்றனர்.பின்னர் தான் இது வேறு உலகம் என்பதை புரிந்து கொள்கின்றனர். அவர்களின் ஆசைகள் வெகுவிரைவில் நிராசை ஆகிவிடுகின்றன.பெருநகரம் தன் இருண்ட பக்கத்தை அவர்களுக்கு காட்டத்தொடங்குகின்றது.வறுமையும் நெருக்கடியும் அவர்களை துரத்த துவங்குகிறது.உயிர் வளர்க்க ஏதோ ஒரு உணவகத்திலோ கடையிலோ வேலைக்கு சேர்கின்றனர்.பெருநகரத்தின் இயந்திரவாழ்க்கையில் அவர்களும் ஓர் இயந்திரமாய் இணைந்து போகிறார்கள்.
இந்த தொடர் சம்பவத்தை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து செல்கிறோமே எப்படி?சாலை சிறுவர்கள் மீதும் தொழிற்சலையில் உள்ள சிறுவர்கள் மீதும் நாம் அக்கறைகாட்ட மறக்கிறோமே ஏன்?
வீட்டை விட்டு நகரத்திற்க்கு ஓடி வருபவர்கள், பின்னர் பெரும் செல்வந்தர்கள் ஆவது போன்றும், குற்றப்பிண்ணனியில் சுகமாய் இருப்பது போன்றும் சித்தரிக்கப்படும் திரைப்படங்கள் சிறுவர்களுக்கு வழிகாட்டி செல்கின்றன.எனக்கு தெரிந்து இதிலிருந்து மாறுபட்டு நிற்பது வசந்தபாலனின் வெயில் மட்டுமே.வீட்டை விட்டு ஓடி போனவரின் வறுமை,இயலாமை,ஏக்கம்,பாசம் ஒவ்வொன்றையும் இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருப்பார்.
சிறு கண்டிப்புக்கு அஞ்சி விடுதியிலிருந்து ஓடிவந்தவன் நான். இது நடந்தது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு.ஓட்டமும் நடையுமாயும்,மாட்டுவண்டி,லாரி,ரயில் என்றும் தொடர்ந்த பயணத்தில் ஆரணியிலிருந்து விருதுநகர் வந்து சேர மூன்று நாட்களாகியிருந்தது.
‘யண்ணே ஒத்த ரூவா குடுணே மிட்டாய் வாங்கிகிறேன்’ என்று எப்போதும் சிரித்தமுகத்துடன் என்னை சுற்றிவரும் மகாராஜா சென்றவாரம் ஒரு நாள் வீட்டைவிட்டு ஓடிப்போனான்.அவன் தாய் அவனுக்கு மிட்டாய் வாங்க காசு கொடுக்கவில்லையாம்.அன்று இரவு அந்த தாய் பெருங்குரலெடுத்து கதறியது என் இதயத்தில் ரணமாய் பதிந்து போனது.இரண்டு நாளில் மகாராஜா வந்துவிட்டான்.ஆனால் அந்த இரவும் அந்த தாயின் கதறலும் என் மனக்கண் முன் வந்துகொண்டே இருக்கிறது.
நான் பின்னோக்கி செல்கிறேன்.அன்று நான் ஓடி போனபோதும் என் தாய் இப்படி தானே கதறியிருப்பாள்.அம்மா அன்று உங்களை அதிகம் அழவைத்துவிட்டேனோ.என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா.

